ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ - எலான் மஸ்க் அறிவிப்பு

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: வெகு விரைவில் ட்விட்டர் நிறுவனத்தை புதிய தலைமை நிர்வாக அலுவலர் ( சிஇஓ ) நிர்வகிப்பார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தான் அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை ட்வீட் மூலம் உலகத்துடன் பகிர்ந்துள்ளார் மஸ்க்.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன.

இந்நிலையில், ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை அவர் நியமித்துள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நான் நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. அவர் தனது பணியை 6 வாரங்களில் தொடங்க உள்ளார். அதன் பிறகு எனது பணி ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என இருக்கும். மென்பொருள் மற்றும் புராடக்ட் சார்ந்த பணிகளை மேற்பார்வையிடுவேன்” என மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய சிஇஓ யார் எனபதை மஸ்க் அறிவிக்கவில்லை. ஆனால், அவர் பெண் என்பது அவரது ட்வீட் மூலம் உறுதியாகி உள்ளது. கடந்த 2006-ல் ட்விட்டர் நிறுவனம் நிறுவப்பட்டது. அது முதல் இதுவரை சிஇஓ பணியை ஆண்கள் மட்டுமே கவனித்து வந்துள்ளனர். ஜாக் டோர்ஸி, இவான் வில்லியம்ஸ், டிக் காஸ்டோலோ, பராக் அகர்வால், எலான் மஸ்க் ஆகியோரை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தை புதிய சிஇஓ நிர்வகிக்க உள்ளார். ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக லிண்டா யாக்கரினோ செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இருந்தாலும் அவர் யார் என்பது இப்போதைக்கு மஸ்க் மட்டுமே அறிவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in