இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீத வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந் விர்மாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பணவீக்கம் உச்சம் தொட்டது. இதனால், உலக நாடுகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகின. இந்நிலையில், சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவின் வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை 6.1 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாகக் குறைத்தது.

எனினும், இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலை யில் இருப்பதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்தன. இந்தச் சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அர்விந் விர்மாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்க மத்திய வங்கி போல் நாம் பணவீக்கத்தைக் குறைப்பதை முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டும். அதே சமயம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்திய வங்கித் துறை குறித்து அவர் கூறுகையில், “சமீபத்தில் அமெரிக்காவில் சில வங்கிகள் திவால் நிலைக்கு உள்ளானதால் அந்நாட்டு வங்கித் துறை நெருக்கடிக்கு உள்ளாகியது. ஆனால், அது இந்திய வங்கித் துறையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வங்கித் துறை பாதுகாப்பாகவே உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in