

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 235 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயர்ந்து 60,392 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்வடைந்து 17,812 ஆக இருந்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் லாப நஷ்டமின்றி தட்டையாக தொடங்கியது. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 54.33 புள்ளிகள் உயர்வடைந்து 60,212.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,749.90 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றியே தொடங்கியது. இருந்த போதிலும், உலகளாவிய கலவையான குறிப்புகள், காலாண்டு வருவாய், சில்லறை பணவீக்க தரவுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் வாகனப் பங்குகளின் ஏற்றம், நீடித்த வெளிநாட்டு பணவரவு காரணமாக பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தில் நிறைவடைந்தன. இதன்மூலமாக தொடர்ந்து 8-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 235.05 புள்ளிகள் உயர்வடைந்து 60,392.77 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.10 புள்ளிகள் உயர்வடைந்து 17,812.40 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்,ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.