

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் பெரிதாக ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தது. சென்செக்ஸ் 44 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்வடைந்து 61,320 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20 புள்ளிகள் (0.11 சதவீதம் ) உயர்வடைந்து 18,036 ஆக இருந்தது.
பங்குச்சந்தை வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 358.99 புள்ளிகள் உயர்வடைந்து 61,634.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106.70 புள்ளிகள் உயர்வடைந்து 18,122.55 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமானப் போக்கு காரணமாக காலையில் இந்திய சந்தைகள் உயர்வில் தொடங்கின. தகவல் தொழில்நுட்ப பங்குகளின் ஏற்றம் காரணாக சென்செக்ஸ் இன்றைய நாளில் 61,682 வரை சென்றது. அதேபோல் நிஃப்டியும் இன்றைய நாளின் உச்சமாக 18,135 வரை சென்றன. இருந்த போதிலும் எஃப் அண்ட் ஓ பங்குகளின் வாரந்திர காலாவதி காரணமாக இறுதி நேர வர்த்தகம் நிலையில்லாமல் சென்று பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 44.42 புள்ளிகள் உயர்வடைந்து 61,319.51 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20.00 புள்ளிகள் உயர்வடைந்து 18,035.85 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், என்டிபிசி, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பவர் கிரிடு கார்பரேஷன் பங்குகள் உயர்வில் இருந்தன.
மறுபுறம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ்,எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.