

புதுடெல்லி: சேமிப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு மற்றும் கணக்கு தொடங்குவதற்கான நடைமுறை எளிமையாக்கப்பட்டதன் காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தொடங்கப்பட்ட டிமேட் கணக்கு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தில் 31 சதவீதம் அதிகரித்து 11 கோடியைத் தொட்டுள்ளது.
பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் கிடைக்கும் ஆதாயம் அதிகரித்து வருவது முதலீட்டாளர் களை அதிக அளவில் டிமேட் கணக்குகளைத் தொடங்கத் தூண்டியுள்ளது.
இதனால் முந்தைய 4 மாதங்களில் இல்லாத அளவில் ஜனவரியில் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், இது 2021-22-ம் நிதியாண்டின் சராசரியான 29 லட்சத்துடன் ஒப்பிடும்போது குறைவு.
அதன்படி, கடந்த செப்டம்பரில் 20 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்ட நிலையில், அது, அக்டோபர் மற்றும் நவம்பரில் தலா 18 லட்சமாகவும், டிசம்பரில் 21 லட்சமாகவும், ஜனவரியில் 22 லட்சமாகவும் காணப்பட்டது.
கடந்த 2022 ஜனவரியில் 8.4 கோடியாக இருந்த டிமேட் கணக்கு எண்ணிக்கை, 2023 ஜனவரியில் 2.6 கோடி புதிதாக தொடங்கப்பட்டு 11 கோடியை எட்டியுள்ளது.