

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 251 புள்ளிகள் (0.41 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 60,432 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 86 புள்ளிகள் (0.48 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,771 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கின. தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்றது. காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 185.33 புள்ளிகள் சரிவடைந்து 60,497.37ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1.80 புள்ளிகள் உயர்வடைந்து 17,854.70 ஆக இருந்தது.
உள்நாட்டு, அமெரிக்க பணவீக்கம் குறித்த தரவுகள் குறித்த எச்சரிக்கை உணர்வு, அதானி குழும பங்குகளின் வீழ்ச்சியால் தொடரும் நிலையில்லாத சந்தைப் போக்கு, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் சரிவு போன்ற காரணங்கள் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. இன்றைய நாளில் அதிகபட்சமாக சென்செக்ஸ் 60,432 வரையிலும், நிஃப்டி,17,720 வரையிலும் இறங்கின.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 250.86 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,431.84 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,770.90 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.