Published : 06 Nov 2022 06:22 AM
Last Updated : 06 Nov 2022 06:22 AM

எலான் மஸ்க் கையகப்படுத்திய நிலையில் ட்விட்டரில் இருந்து 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம்

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் கையகப்படுத்திய நிலையில், ட்விட்டரின் 50% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் முழுமையடைந்தது. அதையடுத்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும் பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக அளவில் ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டன. ஊழியர்களுக்கு அவர்கள் வேலையில் இருக்கிறார்களா, இல்லையா என்பது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது அலுவலக கணினியும் மின்னஞ்சலும் முடக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7,500 பேர் பணிபுரியும் நிலையில்3,700 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் ட்விட்டர் தளத்திலேயே தங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘ட்விட்டருடனான என்னுடைய வேலைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற செய்தியோடு கண் விழித்தேன். நான் உடைந்து போய்விட்டேன்’ என்று ட்விட்டர் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கான மக்கள் கொள்கை வகுப்புப் பிரிவின் இயக்குநர் மைக்கேல் ஆஸ்டின் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் எலான் மஸ்க் செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“ட்விட்டர் நிறுவனம் தினமும் 4 மில்லியன் டாலர் (ரூ.33 கோடி) இழப்பை சந்திக்கிறது. இந்தச்சூழலில் ஆட்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x