Published : 22 Sep 2022 05:28 AM
Last Updated : 22 Sep 2022 05:28 AM

இந்தியாவில் கோடீஸ்வரர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் - கிரெடிட் சுவிஸ் நிறுவனம் தகவல்

சூரிச்: சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனமான கிரெடிட் சுவிஸ், வெளியிட்டுள்ள வருடாந்திர உலக சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல்சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 நிலவரப்படி இந்தியாவில் 7.96 லட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2026-ல் இந்த எண்ணிக்கை 105 சதவீதம் உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும் தெரிவித்துள்ளது. அதேபோல், சீனாவில் 2021 நிலவரப்படி 62 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2026-ல் 97 சதவீதம் உயர்ந்து 1.2 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.4 கோடி கோடீஸ்வரர்கள் உள்ளனர்.2026-ல் அந்த எண்னிக்கை 2.7 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்களின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், பிரிட்டன் நான்காம் இடத்திலும் உள்ளன. தற்போது உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பங்கு 1 சதவீதமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x