

இந்திய வம்சாவளியை சேர்ந்த லஷ்மண் நரசிம்மன் பிரபல அமெரிக்க நாட்டின் பன்னாட்டு கம்பெனியான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பிரபல நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் அறியப்படுகிறது.
இதற்கு முன்னர் லஷ்மண் நரசிம்மன், பெப்சி மற்றும் டெட்டால் போன்ற நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். அந்த சமயத்தில் அந்நிறுவனங்களின் வருவாயும் கூடியுள்ளது. இந்த அனுபவங்களுடன் இப்போது ஸ்டார்பக்ஸில் அவர் இணைந்துள்ளார்.
யார் இவர்?
கடந்த 1967, ஏப்ரல் 15-ம் தேதி அன்று புனேவில் பிறந்தார் லஷ்மண் நரசிம்மன். அவருக்கு வயது 55. இப்போது அமெரிக்காவில் குடியேறியுள்ளார். புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் முடித்தவர். அவர் ஆறு மொழிகளில் பேசும் புலமை கொண்டவர். டெட்டால் உட்பட சுகாதார நலன் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வரும் Reckitt Benckiser நிறுவனத்தில் இதற்கு முன்னர் தலைமை செயல் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். இப்போது அமெரிக்காவில் உள்ள கிரீன்விச் நகரில் வசித்து வருகிறார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உலகின் மிக முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். சுந்தர் பிச்சை, சத்யா நாடெல்லா, பராக் அகர்வால் போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.