Published : 08 Jun 2022 11:25 AM
Last Updated : 08 Jun 2022 11:25 AM

மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு

மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.5% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 2020 மே மாதம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த முறை நடந்த நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் நோக்கில் ரெப்போ (வட்டி) விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியது. இதனால் ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்தது. இந்தநிலையில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்கூட்டத்தின் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு பெரும்பகுதி உக்ரைன் போர் காரணமாக இருக்கலாம். போரால் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 5.7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. பணவீக்க மதிப்பீடு இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இந்த உயர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

பணவீக்கம் உயரும் ஆபத்து தொடர்கிறது. தக்காளி விலையின் சமீபத்திய அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை பணவீக்கத்தை தூண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும். பணவீக்கத்தை எதிர்பார்க்கப்படும் அளவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும்.

தற்போதைய உக்ரைன் போர் மற்றும் கரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. பொருளாதார மீட்சி வேகத்தை எட்டியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்ற கணபிப்பில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிடவும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x