தொடர்ச்சியாக பயனர்களை இழந்து வரும் ஜியோ, வோடாபோன் ஐடியா; ஏறுமுகத்தில் ஏர்டெல் | டிராய்

(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்கள் தங்களது பயனர்களை தொடர்ச்சியாக இழந்து வருவதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பயனர்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. ஒட்டுமொத்த மக்களில் பெரும்பாலானோர் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் தினந்தோறும் கோடிக்கணக்கான பேர் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் இந்தச் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் மட்டும் ஜியோ நிறுவனம் 3.6 மில்லியன் பயனர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1.5 மில்லியன் பயனர்களையும் இழந்துள்ளதாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தரவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜியோ தனது பயனர்களை இழந்துள்ளது. அதே நேரத்தில், பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனத்தில் 1.59 பில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர்.

ஜியோ நிறுவனத்தில் 402.73 மில்லியன் பயனர்களும், ஏர்டெல்லில் 358.07 மில்லியன் பயனர்களும், வோடோபோன் ஐடியாவில் 263.59 மில்லியன் பயனர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 89.74 சதவீதம் சந்தையை தனியார் நிறுவனங்கள் தங்கள் வசம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் உயர்வு காரணமாக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களை இழந்துள்ளதாகவும் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in