Published : 17 Jan 2022 11:25 AM
Last Updated : 17 Jan 2022 11:25 AM

ஏழைகளின் தடுப்பூசி தேவைக்காக கோடீஸ்வரர்களிடம் 1% வரி விதிப்பீர்: ஆக்ஸ்ஃபாம்

படம் உதவி ட்விட்டர்

லண்டன்: "உலகளவில் பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது; அதிலும் பெருந்தொற்று காலத்தில் இந்த இடைவெளி விரிவைடந்துள்ளதால், ஏழைகளுக்கு தடுப்பூசி செலுத்த உலகளவில் உள்ள கோடீஸ்வரர்களுக்கு ஒரு சதவீதம் வரிவிதித்து, அந்தப் பணத்தை தடுப்பூசிக்காக பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும்" என்று ஆக்ஸ்ஃபாம் கோரிக்கை விடுத்துள்ளது

"உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களுக்கு ஒரு சதவீதம் வரி விதித்தாலே போதும், அதை வைத்து அந்தந்த நாட்டின் ஏழைகளுக்கு தடுப்பூசி செலுத்திவிட முடியும், தடுப்பூசி உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்" என்றும் ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், சமத்துவமற்ற சமூகம் குறித்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அமங்கள்:

"உலகளவில் பெருந்தொற்று காலத்தில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும், அவர்களின் சொத்து மதிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏழை நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன; தடுப்பூசி கிடைப்பதிலும் பல்வேறு பாகுபாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலும் பணக்கார, வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி எளிதாகக் கிடைக்கிறது; ஏழை நாடுகளுக்கு கிடைப்பதில்லை.

தடுப்பூசி கிடைப்பதில் இருக்கும் சமத்துவமின்மை குறித்து உலகப் பொருளாதார மாநாட்டில் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த பெருந்தொற்று உலகக் கோடீஸ்வர்களுக்கு மிகப்பெரிய பரிசுகளை, பெரிய அதிர்ஷ்டத்தை அளித்துள்ளது. அவர்களின் சொத்துகளை பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.

2020 மார்ச் மாதம் பெருந்தொற்று தீவிரமடைந்த பின், ஒவ்வொரு நாளும் உலகளவில் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாகியுள்ளார். உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், ஜெப் பெஜோஸ், பில் கேட்ஸ் ஆகியோரின் சொத்துக்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன. அதாவது 1.50 லட்சம் கோடி டாலர்களாக பெருகியுள்ளன. உலகளவில் 310 கோடி ஏழை மக்களின் சொத்துக்களை விட 6 மடங்கு இவர்களின் சொத்து அதிகரித்துள்ளது.

பெருந்தொற்று காலத்தில் 16 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம் 2021 ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியல், கிரெடிட் சூயிஸ் குளோபல் வெல்த் டேட்டா புக், உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கையில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

10 கோடீஸ்வரர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டும் 99 சதவீதம் வரி விதித்தால் அதன் மூலம் 80,000 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். இதை வைத்து, உலகளவில் பொருளாதாரச் சமத்துவத்தை உருவாக்கவும், முற்போக்கு சமூகம் உருவாக்கவும் செலவிட முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநர் கேப்ரியலா பச்சர் அளித்த பேட்டியில், “உலகக் கோடீஸ்வரர்களுக்கு இந்த பெருந்தொற்று பெரிய செல்வச்செழிப்பை வழங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் அனைத்துப் பிரிவினரையும் ஆதரிக்க அரசுகள் பெருந்தொற்று காலத்தில் கோடிக்கணக்கான நிதியைச் செலவு செய்தன, சந்தையை மீட்டெடுக்க கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தன.

ஆனால், நடந்தது என்ன? அந்தப் பணம் முழுவதும் கோடீஸ்வரர்களின் பாக்கெட்டுக்குத்தான் சென்றது. தடுப்பூசி கண்டுபிடித்தது பெருந்தொற்று காலத்தில் வெற்றிகரமான விஷயம், ஆனால், அதைக்கூட பணக்கார நாடுகள் பதுக்கிவிட்டன. கோடீஸ்வரர்களிடம் இருக்கும் பணம் உலகளவில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தடுப்பூசிக்கு பயன்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x