

இந்தியாவில் உள்ள மின்சக்தி விநியோக நிறுவனங்கள் 2020- 2021 ஆம் நிதியாண்டில் எதிர்கொண்ட நஷ்டம் மொத்தம் ரூ.90,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கும், ஆர்எம்ஐ அமைப்பும் வெளியிட்ட மின்சக்தி விநியோகத்துறை குறித்த அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
நமது நாட்டில் மின்சக்தி விநியோகத் துறையில் கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதற்குமான முயற்சியாக, இத்துறையை மாற்றியமைப்பதற்கான சீர்திருத்த வழிமுறைகளை பரிந்துரைக்கும் அறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது.
மின்சக்தி விநியோகத் துறையை மாற்றியமைப்பது தொடர்பான இந்த அறிக்கையை நிதி ஆயோக்கும், ஆர்எம்ஐ அமைப்பும் இணைந்து தயாரித்துள்ளன. இதனை நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், தலைமை செயல் அதிகாரி அமிதாப்காந்த், மத்திய மின்சக்தித் துறை செயலர் அலோக் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்தியாவில் பெரும்பாலான மின்சக்தி விநியோக நிறுவனங்கள் ஆண்டுதோறும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. 2020- 2021ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பின் அளவு மொத்தம் ரூ.90,000 கோடியாகும். அதிகரித்து வரும் இந்த நஷ்டங்களால் இந்த நிறுவனங்கள் மின் உற்பத்தி ஜெனரேட்டர்களுக்கான கட்டணங்களை செலுத்த இயலாமல், உயர்தர மின்சக்தியை உறுதிப்படுத்துவதற்கான முதலீடுகளை செய்ய இயலாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த இயலாமல் சிரமப்படுகின்றன.
இந்தியாவிலும், உலகளவிலும் மின்சக்தி விநியோகத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வை இந்த அறிக்கை அளிக்கிறது. நமது நாட்டில் இத்துறையில் மேற்கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.