

கடனுக்கான வட்டி வீதத்தில் 4-வது முறையாக எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் நிதிக்குழு கொள்கைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.
2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அஷிமா கோயல், ஜெயந்த் ஆர் வர்மா, ஷசான்கா பிடே, கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆகியோர் கூடி 3-ம் தேதி ஆலோசித்தனர். அந்த முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
''குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போதுள்ள 4 சதவீதம் என்ற அளவிலேயே வட்டி வீதம் தொடர்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் 115 புள்ளிகளை வட்டியில் குறைத்தாலும் கடந்த 8 மாதங்களாக எந்தவிதமான வட்டிக்குறைப்பும் செய்யவில்லை.
வங்கிகள் தங்கள் டெபாசிட்களை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கான வட்டியான ரிசர்வ் ரெப்போ ரேட் தொடர்ந்து 3.35 சதவீதம் அளவிலேயே இருக்கும்.
வரும் 2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையில் 11 சதவீதம் எனக் கணித்த நிலையில், ரிசர்வ் வங்கி 0.50 சதவீதத்தைக் குறைத்துள்ளது.
பொருளாதாரம் இனிமேல் ஒரே திசையில்தான் செல்லும். அது மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில்தான் செல்லும்.
நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதம் அளவில் இருக்கும். நிதிப் பற்றாக்குறையின் அதிகபட்ச அளவு 6 சதவீதம்தான். ஆனால், கரோனா வைரஸ் பரவலில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பற்றாக்குறை 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் சராசரியாக 5 சதவீதம் இருக்கும். 3-வது காலாண்டில் 4.3 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது''.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.