Published : 16 Sep 2020 05:29 PM
Last Updated : 16 Sep 2020 05:29 PM
2030-31-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் எஃகு உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 300 மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
மத்திய எஃகு அமைச்சகம், ஒடிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒருங்கிணைந்த எஃகு மையங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய 'பூர்வோதயா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் நோக்கம், எஃகு ஆலைகளின் திறன் மேப்படுத்துவது, மற்றும் எஃகு ஆலைகளுக்கு அருகிலேயே எஃகு தொகுப்புகளை அமைப்பது மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகும்.
2030-31-ம் ஆண்டுக்குள் எஃகு உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 300 மெட்ரிக் டன்னாக உயர்த்த தேசிய எஃகு கொள்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக எஃகு அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது: -
(i) இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட எஃகை அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு இரும்பு மற்றும் எஃகு தயாரிப்புகள் கொள்கை உருவாக்கப்படவுள்ளது.
(ii) உள்நாட்டில் உடைந்த இரும்புகள் கிடைப்பதை அதிகரிக்க, கழிவு எஃகு கொள்கை உருவாக்கப்படும்.
(iii) தரமற்ற எஃகு இறக்குமதி மற்றும் உற்பத்தியை நிறுத்துவதற்கு எஃகு தரக் கட்டுப்பாடு உத்தரவுகளை (SQCO)வழங்குதல். இதுவரை 113 SQCO-கள் வெளியிடப்பட்டுள்ளன.
(iv) எஃகு இறக்குமதிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதற்கு, எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு (சிம்ஸ்).
(v) மதிப்பு கூட்டப்பட்ட எஃகு, துணைப் பொருட்கள், மூலதனப் பொருட்கள் போன்றவற்றுக்கு உற்பத்தி மையங்களை வைத்திருக்கும் எஃகு தொகுப்புகளை மேம்படுத்த வரைவு திட்டக் கொள்கை.
(vi) எஃகு துறைக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, ஏலம், காலாவதியான இரும்பு தாது சுரங்கங்களை மீண்டும் செயல்படுத்தல், சுரங்கங்களின் குத்தகையை நீட்டித்தல் போன்ற பணிகளில் சுரங்கத்துறை மற்றும் நிலக்கரித்துறையுடன் மத்திய எஃகு அமைச்சகம் இணைந்து செயல்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT