Published : 24 Aug 2020 07:25 AM
Last Updated : 24 Aug 2020 07:25 AM
கிஷோர் பியானிக்குச் சொந்தமான பியூச்சர் குழும நிறுவனங்களை வாங்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. கடன் சுமை அதிகரித்ததைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கிஷோர் பியானி முடிவு செய்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி முதல் ரூ.27 ஆயிரம் கோடி வரை இருக்கும். இரு தரப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பியூச்சர் குழும நிறுவனங்கள் மளிகை, ஃபேஷன் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் நிறுவனங்களை இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்படுத்தி வருகிறது. கடன் சுமை அதிகரிப்பு காரணமாக இந்நிறுவனங்களை விற்றுவிட்டு வெளியேற கிஷோர் பியானி முடிவு செய்துள்ளார். இதுகுறித்த பேச்சுவார்த்தை 4 மாதமாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நடைபெறுகிறது.
பியூச்சர் குழுமம் பெற்றுள்ள கடனுக்கான வட்டித் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. நிறுவனம் திவால் மசோதா நடைமுறையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
கடந்த 2012-ல் நிறுவனத்தின் பேன்டலூன் ஃபேஷன் நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு விற்கப்பட்டது. நிறுவனத்தின் பியூச்சர் கேபிடல் நிறுவனம் ரூ.4,250 கோடிக்கு வார்பர்க் பின்கஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT