21 நாட்கள் ஊரடங்கு; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5% பாதிக்கும்?

21 நாட்கள் ஊரடங்கு; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5% பாதிக்கும்?

Published on

கரோனா வைரஸ் எதிரொலியாக கடைபிடிக்கப்பட்டு வரும் 21 நாள் ஊரடங்கு காரணமாக இந்தியாவின் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம் குறைந்து விடும் என பிரபல பொருளாதார ஆய்வு மதிப்பீட்டு நிறுவனமான பார்க்லே தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

இந்தநிலையில் பிரபல பொருளாதார ஆய்வு மதிப்பீட்டு நிறுவனமான பார்க்லே இதுபற்றி கூறுகையில் ‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 20- 21 நிதியாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 21 நாள் ஊரடங்கு காரணமாக பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால் முந்தைய மதிப்பிட்டில் இருந்து மேலும் 2.5 சதவீதம் குறைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக குறையும்’’ என மதிப்பிட்டுள்ளது.

இதுபற்றி ஐஏஎன்எஸ் 21 நாள் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in