

திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐசிஐசிஐ-யின் இயக்குநர்கள் குழு இதற்கான ஒப்புதலை நேற்று வழங்கியுள்ளது. அதன்படி, 100 கோடி பங்குகளை ரூ.10 என்ற வீதத்தில் ஐசிஐசிஐ வாங்க உள்ளது.
தற்போதைய நிலையில் யெஸ் வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் யெஸ் வங்கியின் 49 சதவீதப் பங்குகளை வாங்க இருப்பதாக எஸ்பிஐ அறிவித்தது. அதன்படி எஸ்பிஐ மொத்த அளவில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.
யெஸ் வங்கியை சீரமைப்பதற்கான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.