

டிசம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள இந்த ஆண்டின் இறுதி நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார மந்த நிலையைத் தடுக்க பிப்ரவரியில் தொடங்கிய வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இந்த ஆண்டு முழு வதும் தொடர்ந்தது.
இந்த வருடத்தில் நடத்தப்பட்ட 5 நிதிக் கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் ஆறாவது முறையாக வரும் டிசம்பர் 5-ம் தேதி நடக்கும் கூட்டத்திலும் வட்டி விகித குறைப்பு அறிவிப்புக்கு சாத்தியமுள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
பொருளாதாரத்தையும் சந்தையையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் இந்த ஆண்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி 4.5 சதவீதமாக பதிவாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் இந்த ஆண்டில் நடைபெற்ற 5 நிதிக் கொள்கை கூட்டங்களில் 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக உள்ளது.