Published : 22 Nov 2019 11:20 AM
Last Updated : 22 Nov 2019 11:20 AM

பிபிசிஎல் பங்குகளை வாங்க பொதுத் துறை நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது: மத்திய அமைச்சர தர்மேந்திர பிரதான் தகவல்

பிபிசிஎல் பங்குகளை வாங்க பொதுத்துறை நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது என்றுமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். பிபிசிஎல் பங்குகளை வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்றபொதுத் துறை நிறுவனங்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

பாரத் பெட் ரோலியம் உட்பட 5 பொதுத் துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டட் (பிபிசிஎல்), இந்திய கப்பல் வாணிபக் கழகம் (எஸ்சிஐ), தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம் (டிஹெச்டிசிஐஎல்), வடகிழக்கு மின் சக்தி கழகம் (என்இஇபிசிஓ), கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (கான்கார்) ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச் சரவைக் குழு ஒப்புதலை வழங்கி உள்ளது.

இதில் தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகத்தில் மத்திய அரசு கொண்டிருக்கும் 74.2 சதவீத பங்குகளையும், வடகிழக்கு மின் சக்தி கழகத்தின் 100 சதவீத பங்குகளையும், மற்றொரு பொதுத் துறை நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு (என்டிபிசி) வழங் கப்பட உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசு வசம் இருக்கும் 53.3 சதவீதம் பங்குகளும், இந்திய கப்பல் வாணிபக் கழகத்தில் அரசு கொண்டிருக்கும் 63.8 சதவீத பங்குகளும் ஏல முறையில் விற்கப்பட உள்ளன.

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் 30.8 சதவீத பங்குகளை விற்கவும், 24 சதவீத பங்குகளை தக்க வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் மீதான நிர்வாக உரிமையை அரசு கைவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.1.05 லட்சம் கோடி அளவில் பங்கு விலக்கல் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்து இருந்தது. அதன் பகுதியாக இந்நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பிற பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசு வசம் இருக்கும் பங்கு வீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

அதுகுறித்த பட்டியல் விரைவில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபோது, ‘மத்திய அரசு பிற பொதுத் துறை நிறுவனங்களில் அதன் பங்கு சதவீதத்தை குறைத்தாலும், அதன் நிர்வாக உரிமையை தக்கவைத்துக் கொள்ளும்’ என்று தெரிவித்தார். இதில் தற்போதைய சந்தை மதிப்பின்படி பிபிசிஎல் (ரூ.63,000 கோடி), எஸ்சிஐ (ரூ.2,000 கோடி), கான்கார் (ரூ.13,400 கோடி) ஆகிய மூன்று நிறுவனங்களை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.78,400 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தின் பங்குகள் விற்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் ரூ.12,359 கோடி அளவில் மத்திய அரசு பங்கு விலக்கல் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x