கடன் மேளா மூலம் ரூ. 81,781 கோடி வங்கிக்கடன்: நிதியமைச்சகம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மும்பை


நாடுமுழுவதும் வங்கிகள் கடன் மேளா மூலம் 81,781 கோடி ரூபாய் அளவக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது, ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு போன்றவற்றால் பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்தது. பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடும் நோக்கில் கடந்த மாதம் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக பல்வேறு வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார். அதுபோலவே பொருளாதார சுழற்சி ஏற்படும் பொருட்டு சிறு குறு நிறுவனங்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கு பெரிய அளவில் கடன் வழங்க கடன் மேளா நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

இதையொட்டி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் கடந்த 1-ம் தேதி முதல் வங்கிகள் உடனடி கடன் வழங்கின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரே‌‌ஷன் வங்கி உள்பட பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்த கடன் மேளாவில் பங்குகொண்டன.

இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறியதாவது:

நாடுமுழுவதும் வங்கித்துறை கடன் மேளா மூலம் 81,781 கோடி ரூபாய் அளவக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய கடன்கள் மட்டும் 34,342 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தீபாவளி சீசனிலும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படும். சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in