யோகா ஆசிரியர்களின் தேவை 30% உயரும்: அசோசேம் அறிக்கை

யோகா ஆசிரியர்களின் தேவை 30% உயரும்: அசோசேம் அறிக்கை
Updated on
1 min read

மத்திய அரசு யோகா மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் இன்னும் சில வருடங்களுக்குள் யோகா ஆசிரியர்களுக்கான தேவை 30-35 சதவீதம் உயரும் என்று அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது. உடல் நலம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் யோகாவுக்கான தேவை உயர்வதாக அசோசேம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை வருங்காலத்திலும் தொடரும் என்று கணித்திருக்கிறது.

இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் யோகா குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. மேலும் மக்களின் வாழ்க்கை முறை கடினமாகி மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் யோகா ஆசிரியர்களுக்கு தேவை அதிகரிக்கும். அதேபோல சர்வதேச அளவில் இருந்து யோகா கற்றுக்கொள்ள இந்தியா வருபவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

ஆயூர்வேதம், கார்ப்பரேட் பயற்சி, விடுமுறை கொண்டாட்டம் என யோகாவுக்கு பல பில்லியன் டாலர் சந்தை உள்ளதாக அசோசேம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் தெரிவித்தார். இந்தியாவில் தென் இந்தியர்கள்தான் அதிகளவில் யோகா பயற்சியை செய்கிறார்கள். 30 முதல் 70 வயதுள்ள தென் இந்தியர்களில் 15 சதவீதத்தினர் யோகா பயற்சி செய்கிறார்கள்.

உலக சுகாதார மையத்தின் தகவல்படி (டபிள்யூஹெச்ஓ) மன அழுத்தத்தால் 35 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணி புரியும் சூழல், உடல் உபாதைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் மன அழுத்ததுக்கு உள்ளாகுபவர்கள் மிக அதிகம்.

இதன் மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்குவது மட்டு மல்லாமல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் வராமலும் யோகா தடுப்பதாக அசோசேம் சுகாதார குழுவின் தலைவர் டாக்டர் பி.கே.ராவ் தெரிவித்தார்.

2001-ம் ஆண்டு இந்தியாவில் 63 லட்சம் பேர் யோகா பயிற்சி செய்தார்கள், 2013-ம் ஆண்டு 1.43 கோடி நபர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in