Last Updated : 29 May, 2015 09:58 AM

 

Published : 29 May 2015 09:58 AM
Last Updated : 29 May 2015 09:58 AM

இளைஞர்களுக்கு மெக்கானிக்காகும் வாய்ப்பு: பயிற்சி மையம் தொடங்கியது யமஹா

ஏழை, எளிய இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இரு சக்கர வாகன பயிற்சி பள்ளி ஒன்றை சென்னையில் தொடங்கியுள்ளது யமஹா நிறுவனம். சென்னை டான் பாஸ்கோ தொழிற்பயிற்சி பள்ளியில்தான் அந்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவ னமும் தனது வருவாயின் சிறு பங்கினை சமூக மேம்பாட் டுக்காக செலவழிக்க வேண்டும். சில நிறுவனங்கள், கட்டாயத்துக் காகவே சிஎஸ்ஆர் பணிகளை செய்வது போலிருக்கும். அவற்றின் செயல்பாடுகளை உற்று கவனிப்பவர்களுக்கு அது புரியும்.

சக மனிதன் பயன டைவது மாதிரியும், ஒருவருக்கு எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவது மாதிரியான பணிகளை அரிதாகவே சில நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. சமுதாய மேம்பாட்டை இலக்காகக் கொண்டு பயிற்சி மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம்.

இதன் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் இருசக்கர வாகன தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. சென்னை பேசின் பாலம் அருகேயுள்ள டான் பாஸ்கோ பயிற்சி பள்ளியில் அந்த யமஹாவின் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் மற்றும் டான் பாஸ்கோ பள்ளி இரண்டும் கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.

ஐடிஐ படிப்பதற்காக தகுதி யானவர்கள் இந்த பயிற்சி பள்ளியில் சேரலாம். அதற்காக எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. மோட்டார் சைக்கிள் பற்றிய அனைத்து தொழில்நுட்பமும், பழுது நீக்குவது குறித்தும் இந்த மையத்தில் கற்றுத் தரப்படுகிறது.

பயிற்சிக்காக சேரும் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கி கை குலுக்கி அனுப்புவதோடு யமஹாவின் பணிகள் முடிந்து விடவில்லை. தனக்கு நாடு முழுவதும் உள்ள விற்பனை மையங்களுக்கும், சேவை மையங்களுக்கும் மாணவர் களை நேரடியாக அனுப்பி அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப் புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளது யமஹா.

இந்த அறிவிப்பு, பயிற்சி பள்ளி தொடங்கப்பட்ட ஒரு வார காலத்திலேயே பல நூறு மாணவர்களை சேர்க்கைக்காக இழுத்துள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்திலுள்ள டான் பாஸ்கோ தொழிற்பயிற்சி பள்ளியில் யமஹா தனது மையத்தை தொடங்கியது.

மேலும், டெல்லி, குவாஹட்டி, கோழிக்கோடு, கொச்சி, புவனேஸ்வரம், மங்களூர், ஒளரங் காபாத் ஆகிய இடங்களில் இயங்கி வரும் தொழிற்பயிற்சி பள்ளிகளுடன் இணைந்து யமஹா நிறுவனம், பயிற்சி மையங்களை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அரசு தொழிற்பயிற்சி பள்ளிகள், தனியார் தொழிற்பயிற்சி பள்ளிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து யமஹா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேற்சொன்ன பள்ளி களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த சூழலில்தான் சென்னையிலும் பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளது யமஹா.

இந்த புதிய பயிற்சி பள்ளி குறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஸாகி அஸோனா கூறியதாவது:

இரு சக்கர வாகன உலகில் திறமை மிக்க பணியாட்களும், வல்லுநர்களும் குறைந்து வருகி றார்கள். இதனால் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை சரி செய்வது குறித்து யோசித்த போது உதயமானதுதான் யமஹா பயிற்சி பள்ளித் திட்டம். ஏழை, எளிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சர்வதேச தரத்துக்கு இணையான பயிற்சியை வழங்கவே இந்தப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

போதிய திறனும் வாய்ப்புகளும் இல்லாமல் ஏராளமான இளை ஞர்கள் தங்களின் வாழ்க்கையை தொலைக்கும் நிலையில் உள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது திறமையின்மைதான். இந்தியா மட்டுமன்றி எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இது மிகப்பெரிய தடையாகவிருக்கும். இப்படிப்பட்ட சூழலில்தான் யமஹா பயிற்சி பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறோம்.

இதன் மூலம் இரு சக்கர வாகனத்தை பழுது பார்ப்பது, சர்வீஸ் செய்வது என பல திறன் களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இந்த தொழிற் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு யமஹா தொழில்நுட்ப அகாதமி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அந்த சான்றிதழ்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள யமஹா விற்பனை மற்றும் சேவை மையங் களில் வேலை வாய்ப்பைப் பெற லாம்.

இதில் வர்த்தக யுக்தி எதுவும் கிடையாது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் ஒரு முயற்சியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அது மட்டுமன்றி, இரு சக்கர வாகன உலகில் திறன் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதும் சாத்தியமாகும் என்றார் அவர்.

யமஹா இந்தியா நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவு துணைத்தலைவர் ரவீந்தர் சிங் கூறுகையில், “ஏழை எளிய மாணவர்களுக்கு ஆட்டொமொபைல் தொழில்நுட்ப திறனை தரமான முறையில் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்தை விற்பனை செய்த பிறகு, வாடிக்கையாளர் களுக்கு தேவையான சேவைகளை தரமான முறையில் வழங்குவது மிகவும் அவசியமானது. வாடிக்கை யாளர்களுக்கு தரமான சேவை களை வழங்க, தகுதியான வர்களை எங்களது பயிற்சி பள்ளி உருவாக்கும். எங்களது விநியோ கஸ்தர்கள் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்” என்றார்.

manikandan.m @thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x