டிஎல்எப் மீதான செபி தடையை நீக்கியது தீர்ப்பாயம்

டிஎல்எப் மீதான செபி தடையை நீக்கியது தீர்ப்பாயம்
Updated on
1 min read

டிஎல்எப்நிறுவனம் மீது பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி விதித்த தடையை நீக்கியது பங்குச்சந்தை தீர்ப்பாயம் (எஸ்ஏடி). டிஎல்எப் நிறுவனம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் பணம் திரட்ட முடியாது என்று செபி தடை விதித்திருந்தது. இந்த தடையை பங்குச்சந்தை தீர்ப்பாயம் நீக்கியது.

இதனை நாங்கள் வரவேற்கிறோம். நீதி அமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். உத்தரவை முழுமையாக படித்த பிறகு இதன் மீது கருத்து கூறுவோம் என்று டிஎல்எப்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2007-ம் ஆண்டு டிஎல்எப்நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அப்போது போதுமான தகவல்களை தராததால் டிஎல்எப்நிறுவனர் கே.பி.சிங் அவரது மகன் ராஜிவ் சிங், மகள் பியா சிங் உள்ளிட்ட ஆறு நபர்கள் பங்குச்சந்தை மூலம் பணம் திரட்ட மூன்று ஆண்டுகள் தடைவிதித்தது. கடந்த அக்டோபரில் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து அப்போதே தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது டிஎல்எப் நிறுவனம்.

இந்த நிலையில் இதே வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 86 கோடி ரூபாய் அபராதம் விதித்தது செபி. முதலீட்டாளர்களை தவறாக வழி நடத்தியால் இந்த அபராதத்தை செபி விதித்தது. தடை நீக்கப்பட்டதால் நேற்றைய வர்த்தகத்தில் டிஎல்எப்பங்குகள் உயர்ந்தன. ஆரம்பத்தில் 8 சதவீதம் அளவுக்கு உயர்ந்த இந்த பங்கு வர்த்தக முடிவில் 5 சதவீதம் உயர்ந்து 157 ரூபாயில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in