Published : 28 Jan 2015 11:20 AM
Last Updated : 28 Jan 2015 11:20 AM
திட்டக் கமிஷனுக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த அமைப்பின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பு செயல்பட வேண்டிய விதம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த நிதி ஆயோக் அமைப்பு திட்டங்களை இறுதி செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இது முதல் அனுபவம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் கூட்டத்துக்கு பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்கான வேலைகளை தொடங்க உள்ளனர்
அந்த கூட்டடத்துக்கு பிறகு மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பிற்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்றும் சில செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்த அமைப்பு வருமானத்துக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் செலவுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களுக்கான ஆலோசனைகளை வழங்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அனைத்து மாநில முதல்வர்களோடும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தலாம் என தெரிகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி இந்த கூட்டம் நடத்தப்படலாம் என தெரிகிறது.
இந்த அமைப்புக்கு பிரதமர் மோடி தலைவராக உள்ளார். 65 வருடங்களாக செயல்பட்டு வந்த பழைய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக இந்த அமைப்பு கொண்டு வரப்பட்டது. இந்த அமைப்புக்கு துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர், மனித வளம் மற்றும் மேம்பாடு துறை அமைச்சர் ஸ்மிதி ராணி உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT