

கடந்த 4 வர்த்தக தினங்களில் முதல் முறையாக வாரத்தின் முதல் நாளான திங்களன்று பங்கு சந்தையில் சரிவு காணப்பட்டது. வர்த்தக இறுதியில் 134 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 28559 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 32 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 8555 புள்ளிகளானது.
ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை செவ்வாய்க் கிழமை வெளியிட உள்ளது. வட்டி குறைப்பு இருக்காது என்று ஏற்கெனவே செய்திகள் உலவி வருவதால் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தங்களது முதலீடுகளைத் திரும்ப எடுத்தனர். சரிவுக்கு இது முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்தால் எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகள் விலை கடுமையாக சரிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவு காணப்பட்டது. இதேபோல உலோகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நிறுவனப் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.
காலையில் வர்த்தகம் தொடங் கியதும் புள்ளிகள் படிப்படியாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 28809 புள்ளிகளைத் தொட்டது. பிறகு சரியத் தொடங்கி வர்த்த கத்தின் இறுதியில் முன்தின புள்ளிகளை விட 134 புள்ளிகள் குறைந்தது. முந்தைய மூன்று தின வர்த்தகத்தில் மொத்தம் 355 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ, பிஹெச்இஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. விமான எரிபொருள் விலை குறைந்ததால் விமான நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை சர்ச்சைக்குரிய 80:20 என்ற விதிமுறையை திரும்பப் பெற்றது.
இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கீதாஞ்சலி ஜெம்ஸ், டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. மொத்தம் 1,675 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. 1,218 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. மொத்த வர்த்தகம் ரூ. 3,154 கோடியாகும். கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,834 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்தது.
33000 புள்ளிகளைத் தொடும்
பங்குச் சந்தை குறியீட்டெண் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 33000 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 9850 புள்ளிகளையும் தொடும் என சிட்டி குழுமம் குறிப்பிட்டுள்ளது. உலகளவில் நிதிச் சேவை நிறுவனமான சிட்டி குழுமம் இந்தியப் பொருளாதாரம் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வட்டி விகிதம் குறைவதற்கான சாத்தியம் உள்ளதால், இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைக்கு சிறந்த ஆண்டாக அமையும் என குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வு 2015 டிசம்பரில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளையும், நிஃப்டி 9,850 புள்ளிகளையும் தொடும் என்றும் கூறியுள்ளது.