கூகுள் பிளஸ் துணைத் தலைவர்விக் குன்டோத்ரா ராஜினாமா

கூகுள் பிளஸ் துணைத் தலைவர்விக் குன்டோத்ரா ராஜினாமா
Updated on
1 min read

கூகுள் நிறுவனத்தின் சமூக வலைதளமான கூகுள் பிளஸ் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றிய அதன் துணைத் தலைவர் விக் குன்டோத்ரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மும்பையில் பிறந்து சென்னை ஐஐடி-யில் படித்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 45 வயதாகும் இவர் தனது ராஜிநாமா குறித்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார்.

தனது ராஜிநாமா குறித்த தகவலை கூகுள்+ இணைய பக்கத்தில் வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றியது மிகுந்த மன நிறைவை அளிப்பதாகவும், அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டிய தருணமிது என்று தான் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது எதிர்கால திட்டம் குறித்து அவர் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. அடுத்து என்ன என்ற தலைப்பிட்டு தனது ராஜிநாமா தகவலை அவர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கூகுள் பிளஸ் குழுவிற்கு தான் எப்போதும் கடன்பட்டிருப்பதாகவும், பல்வேறு சந்தேககங்களுக்கு இடையே மிகவும் வெற்றிகரமாக இந்த சமூக தளத்தை உருவாக்கியவர்கள் தனது குழுவினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு சி-நெட் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குன்டோத்ராவின் பெயர் பரிசீலிக்கப்படுவதோடு அவரை நேர்முகம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கூகுள் தலைமையுடன் குன்டோத்ராவுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

கூகுள் நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு சேர்வதற்கு முன்பு 16 ஆண்டுகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பொது மேலாளராக குன்டோத்ரா பணியாற்றியிருந்தார்.

2011-ம் ஆண்டு கூகுள் பிளஸ் உருவாக்கப்பட்டது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களுக்குப் போட்டியாக இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு 5 கோடி வாடிக்கையாளர்கள் கூகுள் பிளஸை பயன்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in