Published : 04 Nov 2013 10:53 AM
Last Updated : 04 Nov 2013 10:53 AM

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு தொடரும்: ப. சிதம்பரம்

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் தங்கம் அதிக அளவில் இறக்குமதியானதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டு முழுமையிலும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 11 டன் தங்கம் இறக்குமதியாகியிருந்தது. இந்த அளவு அக்டோபர் மாதத்தில் 23 டன்னாக உயர்ந்துவிட்டது. பண்டிகைக் காலமாதலால் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம்.

23.5 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து தான் கவலைப்படவில்லை என்று குறிப்பிட்ட சிதம்பரம், இனி வரும் மாதங்களில் 20 டன்னுக்குக் குறைவாக இருக்கும் என நம்புவதாகக் கூறினார். தங்க இறக்குமதி குறைவு காரணமாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (சிஏடி) நிச்சயம் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது நல்ல சமிக்ஞை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை மாதத்தில் தங்கம் இறக்குமதி 47 டன்னாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3 டன்னாகவும் இருந்தது. 2012-13-ம் நிதி ஆண்டில் மொத்தம் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

தங்கம் இறக்குமதி குறைந்து பிற பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதன் மூலம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை இந்த நிதி ஆண்டில் 6,000 கோடி டாலருக்குள் கட்டுப்படுத்த முடியும். 2012-13-ம் நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8,600 கோடி டாலாராக இருந்தது.

தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். தங்க இறக்குமதிக்காக நாட்டுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் அன்னியச் செலாவணியைக் கணக்கில் கொண்டால், வெளியே செல்வதே அதிகம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவு 4.8 சதவீதமாகும். அதாவது 8,800 கோடி டாலாராகும். இதைக் கருத்தில் கொண்டு தங்கத்தின் மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. தங்கத்தின் மதிப்பில் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2,180 கோடி டாலாராகும்.

விவசாய உற்பத்தி அதிகரிக்கும்:

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் விவசாய உற்பத்தி மிக அதிக அளவு இருக்கும் என்று சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார். குறுவை சாகு படியைத் தொடர்ந்து சம்பா சாகுபடியும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். நாட்டின் பெரும்பாலான நீராதாரங்களில் விவசாயத்துக்குப் போதுமான அளவு தண்ணீர் உள்ளதாக அவர் கூறினார். விவசாயத்துக்கு வழங்கப்பட்ட கடன் 12 சதவீத அளவுக்கு அதகிரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். கடந்த ஆண்டை விட குறுவை விளச்சை 10.3 சதவீதம் அதிகமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

காப்பீடு மசோதா:

மிக நீண்ட காலமாக கிடப்பில் உள்ள காப்பீடு மசோதா நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.

காப்பீட்டுத் துறையில் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான புதிய மசோதா நீண்ட காலாமாக நிலுவையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஒப்புக் கொண்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த மசோதா மாநிலங்களவையில் 2008-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ளது. அன்னிய வரம்பை அதிகரிப்பது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய வேண்டும் என கூறப்பட்டது. அந்தக் குழுவும் தனது அறிக்கையை அளித்துவிட்டது.

டிசம்பர் மாதத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x