

புதுடெல்லி: இண்டிகோ நிறுவனத்தின் 200 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, சமீபத்திய ஆண்டுகளில் விமானம் தாமதம், ரத்து என அதன் செயல்பாட்டில் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இண்டிகோ விமானங்கள் நீண்ட காலமாக சரியான நேரத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் 35 சதவீத விமானங்கள் மட்டுமே குறித்த நேரத்தில் இயக்கப்படுவதாக செவ்வாய்கிழமை வெளியான அரசுப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இதற்கு விமானிகள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. விமானிகள் பணிநேர வரம்பு (எப்டிடிஎல்) தொடர்பான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது விமானிகள் பணி நேரத்தை ஒரு நாளில் 8 மணி நேரம், வாரத்தில் 35 மணி நேரம், ஒரு மாதத்தில் 125 மணி நேரம் ஓராண்டில் 1,000 மணி நேரம் வரையறுக்கிறது.
விமானிகளுக்கு கட்டாய ஓய்வு நேரத்தையும் இது வரையறுக்கிறது. இந்த விதிகளுக்கு ஏற்ப விமானிகளின் பணிநேரத்தை மாற்றி அமைக்க முடியாமல் இண்டிகோ திணறுகிறது.
இந்நிலையில் புதிய எப்டிடிஎல் விதிகள், சிறிய தொழில்நுட்ப கோளாறுகள், கனமழை, பனிப் பொழிவு போன்ற வானிலை மாறுபாடுகள், விமானப் போக்குவரத்து அமைப்பில் ஏற்பட்டுள்ள நெரிசல் போன்ற காரணங்களால் விமானங்கள் ரத்து, தாமதம் போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதாவும் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.