‘செபி’-க்கு புதிய தலைவரைத் தேடும் பணி தொடக்கம்

‘செபி’-க்கு புதிய தலைவரைத் தேடும் பணி தொடக்கம்
Updated on
1 min read

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (செபி) புதிய தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சின்ஹா தலைவராக நியமனம் செய்யப் பட்டார். மீண்டும் இரண்டு ஆண்டு களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய தலை வரை தேடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

25 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம் மற்றும் 50 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டம், நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட சில துறைகளில் அனுபவம் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேசி அக்டோபர் 21 ஆகும். ஏழாவது சம்பள கமிஷன்படி `செபி’ தலைவருக்கு ஊதியம் ரூ.4.5 லட்சமாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in