வறுமைக்கோடு (Poverty Line) - 1 - என்றால் என்ன?

வறுமைக்கோடு (Poverty Line) - 1 - என்றால் என்ன?
Updated on
1 min read

வறுமையை வரையறுப்பதிலும், கணக்கிடுவதிலும் பொருளாதாரத்தின் பங்கு முக்கியம் என்று பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி 2011 -ல் மறைந்த சுரேஷ் டெண்டுல்கர் வரை பல பொருளியல் அறிஞர்கள், அரசின் வல்லுநர் குழுக்கள், உலக வங்கி போன்ற அமைப்புகள் வறுமையினை அளவிட முயன்றும், அதையொட்டி பல்வேறு விதமான விவாதங்கள் நடந்தேறியும், எல்லோரும் எற்றுக்கொள்ளுமளவுக்கு எந்த ஒரு வரையறையும், அளவீடும் இன்றுவரை எட்டப்படவில்லை.

‘வறுமை’ என்ன அர்த்தத்தை ஏந்தி வருகின்றதென்பது யார் கேள்வி கேட்கின்றார்கள், அது எப்படி புரிந்துகொள்ளப்பட்டு, யார் பதிலளிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. வறுமை பற்றி பல்வேறு மதிப்பீடுகள் இருந்தபோதும், வெகுவான விவாதத்திற்கும் அதிக சர்ச்சைக்கும், ஏன் அண்மையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியது திட்டக்குழுவின் வரையறையும் மதிப்பீடும்தான் என்பதால் அதனைப் பார்போம்.

திட்டக்குழுவின் வறுமை மதிப்பீடு

அரசுக்காக இந்தியாவின் வறுமையினை மதிப்பிடும் நிறுவனம் திட்டக்குழு ஆகும். வறுமை பற்றிய முறையான மதிப்பீடு முதல் முதலில் 1971 இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் அறிஞர்களால் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக் கோடு’ என அன்றைக்கு வரையறுத்திருந்தார்கள். திட்டக்குழு இதை நகர்ப்புறத்துக்கு 2,400 கலோரி, கிராமப்புறத்துக்கு 2100 கலோரி என 1973-74 இல் மாற்றியமைத்தது; இதனடிப்படையில் அன்றைய விலைவாசியில் தினமும் 2400 கலோரியுள்ள உணவை கிராமங்களில் வாங்க ஒரு மாதத்திற்கு ஒருவருக்குத் தேவைப்பட்ட பணம் ரூ.49.10; நகர்ப்புறத்தில் தினமும் 2100 கலோரி உணவு வாங்க ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட பணம் ரூ.56.

இந்த ரூபாய் மதிப்புதான் வறுமைக் கோடு என வரையறை செய்யப்பட்டது. அதாவது, ஒரு மாதத்திற்கு கிராமத்தில் ரூ49.10-ம், நகர்ப்புறத்தில் ரூ56-ம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலும் அப்படி இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்வதாக பொருள். இந்த வரையறையின்படி, 1973-74-ல் நாட்டின் பாதிப் பேர் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர். 1973-74-ல் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுத் தேவையை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வறுமைக்கோடு எந்தவித பெரிய மாற்றமும் இன்றி அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடந்து கடைப்பிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் விலைவாசி ஏற்றத்துக்குத் தேவையான திருத்தங்கள் மட்டும் இதில் செய்யப்பட்டது. திட்டக்குழுவின் இந்த அணுகுமுறையும், ஒரு மனிதனின் அடிப்படை தேவை வெறும் உணவு மட்டும்தான், அந்த குறைந்தபட்ச உணவிருந்தால் அவன் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துவிடுகின்றான் என்ற நிலைப்பாடும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளாயின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in