வரலாற்றில் மிக அதிகபட்சமாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்வு
நாமக்கல்: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
நாமக்கல் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) விலை நிர்ணயம் செய்கிறது. அதை கோழிப் பண்ணையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2024 டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 590 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே, நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 14-ம் தேதி முட்டை விலை 590 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது. இச்சூழலில் நேற்று என்இசிசி மண்டலத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, பண்ணைக்கொள்முதல் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 50 ஆண்டு கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டையின் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ளதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை ஏற்றம் கண்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (பைசாவில்): சென்னை 660, பர்வாலா 621, பெங்களூரு 645, டெல்லி 660, ஹைதராபாத் 605, மும்பை 670, மைசூர் 610, விஜயவாடா 625, ஹொஸ்பேட் 585, கொல்கத்தா 685. இதேபோல,பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.112 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
