Last Updated : 30 Jun, 2025 03:05 PM

 

Published : 30 Jun 2025 03:05 PM
Last Updated : 30 Jun 2025 03:05 PM

தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு

படம்: என்.ராஜேஷ்

சாதகமான வானிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிவடைய தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்தது. இதன் காரணமாக உப்பளங்களை சீரமைக்கும் பணிகளை உற்பத்தியாளர்கள் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தான் தொடங்கினர். சீரமைப்பு பணிகள் முடிந்து உப்பு வாறும் பணிகள் தொடங்கிய நிலையில், மழை குறுக்கீடு காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மே 15-ம் தேதி வரை மழை குறுகிட்டதால் உப்பு உற்பத்தி சரியாக நடைபெறவில்லை. இதனால் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு குஜராத் மாநிலத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரீ புளோ உப்பு தயாரிப்பாளர்கள் சுமார் 2 லட்சம் டன் உப்பை குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்தனர்.

மே 15-ம் தேதிக்கு பிறகு உப்பு உற்பத்திக்கு சாதகமான வானிலை ஏற்பட்டது. தென்மேற்கு பருவக்காற்று வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியது. இதனால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

15 சதவீத உற்பத்தி: இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: இந்த ஆண்டு மழை காரணமாக மே 15-ம் தேதி வரை உப்பு உற்பத்தி சரிவர நடைபெறவில்லை. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 50 சதவீதம் உப்பு உற்பத்தியாகி இருக்கும்.

தற்போது வெறும் 15 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தியாகி இருக்கிறது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் இன்னும் பாக்கியுள்ளன. எந்தவித தடங்கலும் ஏற்படாவிட்டால் இன்னும் 50 சதவீதம் வரை உப்பு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இது வரும் காலத்தில் நிலவும் வானிலையை பொறுத்தே உள்ளது.

விலை சரிவு: இந்த ஆண்டு தென்மேற்கு பருவக் காற்று முன் கூட்டியே தொடங்கியுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வெயில் அடித்து வருகிறது. உப்பு உற்பத்திக்கு சாதகமான நிலை இருப்பதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைய தொடங்கியுள்ளது. முன்பு ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை விலை போன ஒரு டன் உப்பு தற்போது ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை தான் விலை போகிறது.

குஜராத் உப்பு வருகைக்கும் விலை குறைவுக்கும் தொடர்பில்லை. உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே விலை குறைந்துள்ளது. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x