Published : 07 Jun 2025 08:36 AM
Last Updated : 07 Jun 2025 08:36 AM
புதுடெல்லி: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து முக்கிய உரிமத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இருந்த ஒரு பெரிய தடை நீங்கியுள்ளது. உரிமம் பெற்றுள்ளதையடுத்து இந்தியாவில் அந்த நிறுவனம் மிக வேகமாக வணிக நடவடிக்கைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து உரிமம் பெற்ற மூன்றாவது பெரிய நிறுவனம் ஸ்டார்லிங்க் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் விண்ணப்பங்களையும் தொலைத்தொடர்பு அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், உரிமம் பெற்றது குறித்தான கேள்விக்கு ஸ்டார்லிங்க் மற்றும் தொலைத்தொடர்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. இந்தியாவில் வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்கு உரிமம் பெறுவதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனம் 2022 முதல் காத்திருந்த நிலையில், தேசப் பாதுகாப்பை காரணம்காட்டி உரிமம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அமேசானின் குய்பர் இன்னும் உரிமத்துக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT