Published : 09 May 2025 02:18 PM
Last Updated : 09 May 2025 02:18 PM

பெட்ரோல், டீசல், எல்பிஜி வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை: ஐஓசி

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகிய எரிபொருட்களை வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை என்றும் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதுமான அளவு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்கள் விநியோகச் சங்கிலிகள் சீராக இயங்குகின்றன. மேலும் எரிபொருள் மற்றும் எல்பிஜி அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன.

பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அமைதியாக இருப்பதன் மூலமும், தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலியைத் தடையின்றிப் பராமரிக்க முடியும், அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் தீவிரமடைந்து வருவதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் தேவையற்றது என்பதை தெரிவிக்கும் நோக்கில் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதேபோல், பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடு தழுவிய எங்கள் நெட்வொர்க்கில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி போதுமான அளவு இருப்பு இருப்பதாக பிபிசிஎல் (BPCL) அனைத்து குடிமக்களுக்கும் உறுதியளிக்கிறது.

எங்கள் அனைத்து எரிபொருள் நிலையங்களும் எல்பிஜி விநியோகஸ்தர்களும் சீராக இயங்குகின்றன. நுகர்வோரின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய முழுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கவலைப்படவோ அல்லது பீதி அடையவோ எந்தக் காரணமும் இல்லை. எங்கள் விநியோகச் சங்கிலி செயல்பாடுகள் வலுவாகவும் திறமையாகவும் இருப்பதாலும் தடையற்ற விநியோகங்களை உறுதி செய்து வருவதாலும் அனைத்து வாடிக்கையாளர்களும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x