அணுமின் சக்தி திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அணுமின்சக்தி துறைக்கு ஊக்கம் தருவது முக்கியமானது. நமது நாட்டில் மின்சாரம் தயாரிப்பதற்கு அடிப்படையாக நிலக்கரி உள்ளது. ஆனால், அதை மாற்றி அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முன்னுரிமையை மத்திய அரசு அளித்து வருகிறது.
வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி அணுமின் சக்தி தயாரிப்பதற்கு ஒதுக்கப்படும். 2047-ம் ஆண்டுகளுக்கு அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 2033- ம் ஆண்டுக்குள் நமது நாட்டில் 5 சிறிய ரக அணு உலைகள் (எஸ்எம்ஆர்) நிறுவப்படும்.
அணுமின்சக்தி தயாரிக்க உதவும் 25 முக்கிய கனிமங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும். இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
