கோயம்பேட்டில் பெரிய வெங்காயம், தக்காளி விலை குறைந்தது

கோயம்பேட்டில் பெரிய வெங்காயம், தக்காளி விலை குறைந்தது
Updated on
1 min read

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.35 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் மாத இறுதியில், டிசம்பர் மாத தொடக்கத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து அவற்றின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் மொத்த விலையில் ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.35 ஆகவும், ரூ.45-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.30 ஆகவும் குறைந்துள்ளது. சாம்பார் வெங்காயமும் ரூ.30-க்கு கிடைத்து வருகிறது.

மற்ற காய்கறிகளான பீன்ஸ், கேரட், அவரைக்காய் தலா ரூ.40, பீட்ரூட் ரூ.30, உருளைக்கிழங்கு, பாகற்காய் தலா ரூ.25, வெண்டைக்காய், நூக்கல் தலா ரூ.20, முள்ளங்கி, புடலங்காய் தலா ரூ.15, முட்டைகோஸ் ரூ.12, கத்தரிக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் வழக்கம்போல ரூ.250 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தக்காளி மற்றும் வெங்காய வரத்து தற்போது அதிகரித்திருப்பதால் விலை குறைந்து வருகிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in