11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்துதல், வங்கி சேமிப்பு கணக்கு தொடங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. நிதிசார் கல்வியானது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பத்தினருக்கும் நிதி சார்ந்த விழிப்புணர்வை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

நிதிசார் திறனை வளர்ப்பது, திட்ட மானியங்கள், வட்டி மானியம், வங்கி கடன் என பல்வேறு நிதி சேவைகளை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் எளிதில் அணுகுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நிதி சார்ந்த விழிப்புணர்வை பெறும் வகையில் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி குறித்த பயிற்சிகளை வழங்க ரூ.4.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, இதுவரை மொத்தம் 2.33 லட்சம் சுய உதவிக்குழு மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மகளிருக்கும் வரும் டிச.31-ம் தேதிக்குள் பயிற்சிகளை நிறைவு செய்யுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in