ஒரே நாளில் ரூ.238 கோடி வசூல்: தமிழக பதிவுத் துறையில் சாதனை!

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு டிச.5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழக அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கி வரும் பதிவுத் துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு நவம்பர் மாத வருவாயுடன் ஒப்பிடும்போது, இந்த நவம்பர் 2024-ம் மாதத்தில் கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், டிச.5-ம் தேதி கார்த்திகை மாத சுப முகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முன்பதிவு டோக்கன்கள் 100-லிருந்து 150ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப் பதிவு டோக்கன்களை பயன்படுத்தி கடந்த டிச.5-ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது" என்று அமைச்சர் மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in