இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரையில் ஐபிஓ மூலம் ரூ.1.19 லட்சம் கோடி திரட்டல்: உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா

இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரையில் ஐபிஓ மூலம் ரூ.1.19 லட்சம் கோடி திரட்டல்: உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா

Published on

மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் நடப்புஆண்டில் இதுவரையில் ஐபிஓ மூலம் நிறுவனங்கள் ரூ.1.19 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன.

இந்நிலையில், ஐபிஓ மூலம் அதிகம் நிதி திரட்டிய பங்குச் சந்தைகள் வரிசையில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரூ.2.20 லட்சம் கோடி நிதி திரட்டி அமெரிக்கா முதல் இடத்திலும், ரூ.89,800 கோடிநிதி திரட்டி சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 68 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளன. சமீபத்தில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஐபிஓ மூலம் ரூ.11,300 கோடியும் ஏசிஎம்இ சோலார் ரூ.2,900 கோடியும் நிதி திரட்டியுள்ளன. மிக அதிகபட்சமாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ஐபிஓ மூலம் ரூ.27,870 கோடி நிதி திரட்டியது.

இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஆரோக்கியமாக இருப்பதாலும் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டுகின்றன என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் 17.9 கோடி டிமேட் கணக்குகள் உள்ளன. இவற்றில் 3.5 கணக்குகள் இவ்வாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 35 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in