Published : 09 May 2024 05:08 AM
Last Updated : 09 May 2024 05:08 AM

‘சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர் உண்மை தன்மையை சரிபார்க்க கைரேகை பதிவு கட்டாயம்’

சென்னை: இந்தியன் ஆயில், பாரத்மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்தசிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்குக்கு மத்திய அரசின்மானியத் தொகை செலுத்தப்படுகிறது.

மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ்,வறுமைக் கோட்டுக்குக் கீழேவசிக்கும் மக்களுக்கு இலவசஎரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 41 லட்சம்இலவச பயனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 2.33 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக, அவர்களின் கைவிரல் கைரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது எரிவாயு இணைப்புடன் அவர்களது கைரேகையை மின்னணு முறையில் (இ-கேஒய்சி) பதிவு செய்ய வேண்டும். இது தவிர முக பதிவு மூலமாகவும் வாடிக்கையாளர்களின் சரிபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஏஜென்சிக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

ஏஜென்சிக்கு செல்ல முடியாத மூத்தக் குடிமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மொபைல் போன் செயலி மூலம் முகம் பதிவு செய்யப்படுகிறது.

மேலும், இந்த நடைமுறைக்கு எவ்வித கால கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இதற்காக, வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அத்துடன், இந்தநடைமுறைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக செய்து தரப்படும்.

மேலும், கைவிரல் பதிவு செய்ய வரும் ஊழியர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தங்களது காஸ் ஏஜென்சி அல்லது எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x