Published : 08 May 2024 11:51 AM
Last Updated : 08 May 2024 11:51 AM

300+ ஊழியர்கள் விடுப்பு: 70-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிப்பு

கோப்புப்படம்

மும்பை: சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு என 79 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி இந்த 300+ ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். அதோடு தங்களது மொபைல் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளனர். இந்த ஊழியர்களை தொடர்பு கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் முயற்சிப்பதாக தகவல்.

இதற்கு காரணம் நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2021 முதல் நிர்வகித்து வருகிறது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது.

“கடைசி நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் (கேபின் க்ரூ) உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுப்பதாக தெரிவித்தனர். நேற்று இரவு முதல் இதை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக விமான பயணம் தாமதமாகி உள்ளது மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள ஊழியர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.

இதனால் எங்கள் பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கலை விரைந்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம்” என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இடையூறுக்காக நாங்கள் பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தொகையை முழுவதும் திரும்ப வழங்குவது அல்லது வேறொரு பயணத்தை திட்டமிட முடிவு செய்துள்ளதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இதுகுறித்து தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் வந்த பிறகே விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக தங்களது பதிவில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் போராட்டத்துக்கு காரணம் என்ன? - நிறுவனம் ஊழியர்களை நடத்தும் முறையில் சமத்துவம் இல்லை ஊழியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இழப்பீடு சார்ந்து முக்கிய தொகுப்பில் பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதற்குரிய பணிக்கான பொறுப்பில் தாங்கள் பணி அமர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு ஏஐஎஸ் உடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இணைக்கும் முடிவில் டாடா குழுமம் இருப்பதாக தகவல்.

கடந்த மாதம் டாடாவின் விஸ்டாரா விமான நிறுவன சேவை, விமானிகள் (பைலட்) சார்பில் எழுந்த பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதுவும் விஸ்டாராவை ஏர் இந்தியாவுடன் இணைப்பது மற்றும் ஊதியம் சார்ந்து நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x