

சென்னை: கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை - மொரிசியஸ் விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.
கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், சென்னை - மொரிசியஸ் - சென்னை இடையே செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஏர் மொரிசியஸ் விமான நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க முன்வந்தது. முதலில் வாரத்தில் சனிக் கிழமை ஒரு நாள் மட்டும் விமான சேவையை தொடங்குவது என்றும், பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து விமான சேவையை அதிகரிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பயண நேரம் 5 மணி 45 நிமிடம்: அதன்படி, சனிக் கிழமையான நேற்று இந்த வாரத்தின் முதல் பயணிகள் விமான சேவை இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் பயண நேரம் 5 மணி 45 நிமிடங்கள். கட்டணம் ரூ. 26,406 என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.