Last Updated : 01 Jan, 2024 02:40 PM

1  

Published : 01 Jan 2024 02:40 PM
Last Updated : 01 Jan 2024 02:40 PM

“இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு தரப்புக்கும் பயன்” - பியூஷ் கோயல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் | கோப்புப்படம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முக்கிய முன்முயற்சிகளை எவ்வாறு உன்னிப்பாகத் திட்டமிடுகிறது என்பதற்கு இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், ஒரு சிறந்த உதாரணம். கடந்த வருடம் அமலுக்கு வந்த இது அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு சாமானிய மக்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறுவதற்காக கொண்டுவரப்படுகின்றன.

கிரிக்கெட்டை நேசிக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இரு தரப்பினருக்கும் பரஸ்பர பயனளிக்கக் கூடியதாகும். நமது அமிர்த காலத்தில் புதிய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களின் உலகளாவிய பார்வையை இது பிரதிபலிக்கிறது.

சட்ட விதிகளுக்கு ஆதரவளிக்கும் ஒத்த சட்ட அமைப்பு முறைகளைக் கொண்டுள்ள இரண்டு நாடாளுமன்ற ஜனநாயகங்களுக்கு இடையிலான உத்தி சார்ந்த கூட்டு முயற்சியை இது மீண்டும் வலியுறுத்துகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இரு நாடுகளும் குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஜப்பானுடன் முத்தரப்பு விநியோகச் சங்கிலி நெகிழ்தன்மை முன்முயற்சியிலும், 14 உறுப்பினர்கள் கொண்ட இந்தோ பசிபிக் பொருளாதாரத் திட்டத்திலும் இரு நாடுகளும் சேர்ந்துள்ளன.

சுமார் பத்து ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ள முதலாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு அபரிமிதமான திறன் உள்ளது. பெரும்பாலும் கச்சா பொருட்கள் மற்றும் இடைநிலை தயாரிப்புகளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதோடு, முழுவதும் தயாரிக்கப்பட்ட பொருட்களை பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது. இதன் காரணமாக இந்திய தொழில்முனைவோரின் உள்ளீட்டு செலவை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறைப்பதோடு, அவர்களது பொருட்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிட வழிவகை செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்திய புத்தொழில் நிறுவனங்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் உருவாகின்றன.

ஏற்றுமதியில் வலுவான வளர்ச்சி: இந்திய- ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களை மையமாகக் கொண்ட துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் என்ற மோடி அரசின் நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது.

2023-24 ஆம் ஆண்டின் ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 14% அதிகரித்திருப்பது, சவாலான உலகளாவிய சூழலில் உலகின் பிற நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத்தை விட மிகச்சிறந்த செயல்பாடாகும். முக்கிய வளர்ந்த பொருளாதாரங்களில், தேவை குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி 4% குறைந்த போதும், இந்தியாவிலிருந்து அதன் கொள்முதல்கள், சீராக வலுப்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் 19 சதவிகிதம் சரிந்திருப்பது, வர்த்தக பற்றாக்குறையை 39% குறைத்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளில் வளர்ச்சியை பதிவு செய்தன. ஆஸ்திரேலியாவுக்கான பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2023-24 ஏப்ரல்-அக்டோபரில் 24 சதவிகிதம் அதிகரித்தது, இது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 1 சதவிகித உயர்வாகும். ஆயத்த ஆடைகள் துறையில் ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி 27 சதவிகிம் அதிகரித்தது. ஆனால், ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவை சந்தித்தது.

இதேபோல இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தால், மின்னணு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் ஏற்றுமதியும் இந்தத் துறைகளில் பதிவான ஒட்டுமொத்த ஏற்றுமதியை விட அதிகரித்துள்ளன. இது தவிர, ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக சுமார் 700 பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2023 -24 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 65 மில்லியன் டாலர் மதிப்பிலான திறன்பேசிகள் உட்பட 335 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகள் இதில் அடங்கும்.

அந்நிய நேரடி முதலீட்டில் மிகப்பெரிய வளர்ச்சி: பிரதமரின் தலைமையின் கீழ் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் பாதையில் இந்தியா முன்னேறுகிறது. நமது வர்த்தக கூட்டாளிகள் இந்த வலிமையை அங்கீகரிப்பதோடு, வேளாண்மை மற்றும் பால்வளம் போன்ற துறைகளைப் பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்துவதையும் பாராட்டுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடு 307.2 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது கடந்த 2022-ஆம் ஆண்டு முழுவதும் பெறப்பட்ட 42.43 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை விட ஏழு மடங்கு அதிகமாகும். 2022-ஆம் ஆண்டில் ஆலோசனை சேவைகள் துறையில்0.15 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு, தற்போது 248 மில்லியன் அமெரிக்க டாலராக மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக சேவைகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன. கல்வி, ஒலி-ஒளி சேவைகள் மற்றும் இயக்கம் சார்ந்த துறையில் ஆஸ்திரேலியாவுடனான பிற இருதரப்பு ஒப்பந்தங்களுடன் இணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் வேகம், வணிக இயக்கத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வலுவான வளர்ச்சி மற்றும் இந்திய மாணவர்களுக்கு ஆய்வுக்குப் பிந்தைய வேலை விசாக்களில் கிட்டத்தட்ட நூறு சதவிகிதத்துக்கும் அதிகமான வலுவான வளர்ச்சிக்கு சரியான பின்னணியை வழங்கியது.

வர்த்தக ஒப்பந்தங்களுக்கு புதிய அணுகுமுறை: இந்திய- ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் போல, ஐக்கிய அரபு அமீரகத்துடனும் ஒப்பந்தம் ஒன்று கடந்த ஆண்டு கையெழுத்தானது. தேசிய மற்றும் மண்டல வர்த்தக கூட்டமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்துறை குழுமங்கள், பொருளாதார நிபுணர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் ஏராளமான அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களும் தொழில்துறை தலைவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டன. ஒவ்வொரு கொள்கையும் ஒப்பந்தமும் நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகத் தெளிவாக இருக்கிறார். இந்த உணர்வோடு மொரீசியஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுடன் நாம் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்துட்டுள்ளோம். இது நமது வர்த்தகங்களில், போட்டித் தன்மை, புதிய சந்தைகளை உருவாக்கம், வெளிப்படை தன்மை மற்றும் பரஸ்பர நன்மைகளை விளைவிக்கும்.

இதுபோன்ற தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் வர்த்தகம் மற்றும் வணிகங்களை விரிவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலை மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

- கட்டுரையாளர்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x