

பழநி: பழநி ஆயக்குடியில் கொய்யா வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. 20 கிலோ கொய்யா ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.
பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரபூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 டன் வரை கொய்யா விற்பனையாகும்.
கடந்த மாதம் கொய்யா சீசன் நிறைவடைந்ததால் அதன் வரத்தும் குறைய தொடங்கியது. தற்போது வரத்து மேலும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு பெட்டி (20 கிலோ) ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. தற்போது ஒரு பெட்டி ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது.
இது குறித்து கொய்யா விவசாயிகள் கூறியதாவது: ஒரு பெட்டி ( 20 கிலோ ) கொய்யா ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றால் விவசாயிகளுக்கு விலை கட்டுப்படியாகும். தற்போது வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால் தினமும் ஆயக்குடி சந்தைக்கு 5 டன் கொய்யா மட்டுமே விற்பனைக்கு வருகிறது. ஐயப்ப சீசன் என்பதால் கொய்யாவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஒரு பெட்டி கொய்யா ரூ.1,000-க்கு மேல் விற்பனையாகிறது என்று கூறினார்.