Published : 10 Dec 2023 01:39 PM
Last Updated : 10 Dec 2023 01:39 PM

இறக்குமதி அனுமதியால் பட்டாணி விலை குறைவு - ஒரு குவிண்டால் ரூ.4,000-க்கு விற்பனை

மதுரை: மத்திய அரசின் இறக்குமதி அறிவிப்பால் பட்டாணி விலை குவிண்டால் விலை (100கிலோ) சுமார் ரூ.7,200ல் இருந்து ரூ.4,000 ஆக விலை குறைந்துவிட்டது என்று உணவுப் பொருள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வால் காய்கறிகள் விலை மெல்ல உயர்ந்து வரும்நிலையில் மளிகைப்பொருட்கள் விலை 20 சதவீதம் முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், பட்டாணி விலை மட்டும் 100 மடங்கு விலை அதிகரித்தது. தமிழகம், கேரளாவில் மக்கள் அன்றாட உணவு பொருள் தயாரிப்பில் அதிகம் பட்டாணியைப் பயன்படுத்துகிறார்கள். கடந்த மூன்று ஆண்டிற்கு முன் மத்திய அரசு, பட்டாணி இறக்குமதிக்கு தடை விதித்தது. அதனால், இந்தியாவில் பட்டானி பற்றாக்குறை அதிகரித்ததால் பட்டாணி அதிகம் விளையும் வங்கதேசத்தில் இருந்து அதிகளவு கடத்தப்பட்டு வந்தது. இறக்குமதி தடை காரணமாக தமிழகம், கேரளாவில் மட்டுமில்லாது மற்ற மாநிலங்களில் பட்டாணி விலை அதிகரித்தது. பட்டாணி சார்ந்த உணவு பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட 2,000 நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து வந்தனர். தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம், சமீபத்தில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசு பட்டாணி இறக்குமதிக்கு கலால் வரியை முழுமையாக நீக்கி, அறிவிப்பு வெளியிட்டதோடு பட்டாணியை இறக்குமதி செய்வதற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அதேநேரத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி குறுகிய காலமாக இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் பட்டாணி குறிப்பிட்ட காலத்துக்குள் வந்து சேருவது மிகவும் கடினமாகும். மேலும், 2024-ம் ஆண்டு மக்களவைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு கால நீட்டிப்பு பெறுவதற்கான சாத்தியக்கூறு அல்ல. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துவிடும். அதற்கான அனுமதி பெறுவதும் கடினமாக இருக்கும். எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியை 30.6.2024 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என உணவு பொருள் வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து உணவுபொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறுகையில், ‘‘காலால் வரி விலக்குடன் பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு மார்ச் 31-ம் தேதி அனுமதி அளித்துள்ளதிற்கு நன்றி. இதனால், பலமடங்கு உயர்ந்த பட்டாணி விலை குறைந்து ஏழை, எளிய மக்களும் பட்டாணியை மீண்டும் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். தற்போது இறக்குமதி அறிவிப்பால் பட்டாணி விலை குவிண்டால் விலை (100கிலோ) சுமார் ரூ.7,200ல் இருந்து ரூ.4,000 ஆக விலை குறைந்துவிட்டது.

தற்போது பட்டாணி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது போல் கலால் வரி விலக்குடன் கஸ்பா பீஸ் மற்றும் டன் பீஸ் இறக்குமதி செய்வதற்கும் அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் பட்டாணியில் இருந்து பட்டாணி பருப்பு மற்றும் மாவு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா மாநிலங்களில் உள்ள ஆலைகள் வழக்கம்போல் இயங்க வாய்ப்புள்ளது. பட்டாணி இறக்குமதி தடையால் கடந்த 5 ஆண்டு காலமாக மாவு தயாரிப்பாளர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x