ஒரே நாளில் ரூ.720 அதிகரித்து புதிய உச்சம்: பவுன் விலை ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.46,960-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தை எட்டியது.

கடந்த 2022 டிச.26-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், இந்த ஆண்டுஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையானது. பிப். 2-ம் தேதி ரூ.44,040, மார்ச் 5-ம் தேதி ரூ.45,520, மே 3-ம் தேதி ரூ.45,648 என தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 4-ம் தேதி ரூ.46,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, ஒரு கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.5,870-க்கும், ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கும் விற்பனையானது. இதன்மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.50,720-க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து சென்னை தங்க நகை, வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் தேவைஅதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். அத்துடன், உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. எனவே, இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை அதிகரிக்கக்கூடும்’’ என்றார்.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.82,200-க்கும் விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in