மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த போதுமானதாகாது: மூடிஸ் கணிப்பு

மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த போதுமானதாகாது: மூடிஸ் கணிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகை தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்கும் என்றாலும்கூட அதுமட்டுமே பொருளாதாரத்தை வலுவானதாக்கிவிட போதுமானதாக இருக்காது. அதற்கு இங்குள்ள கற்றல் விளைவின் தரமும் ஒரு காரணமாகும் என்று கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கல்வித்தரத்தை மேம்படுத்துவது இந்தியா போன்ற நாடுகள் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் வேலையிழப்புக்கு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ள இயலும். குறிப்பாக பிபிஓ, கால் சென்டர்கள் போன்ற சேவை மையங்களிலும் வேலையிழப்பைத் தவிர்க்கலாம். இப்போதைக்கு இந்தியாவின் கற்றல் விளைவின் தரம் பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ளதுபோல்தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

இத்தகவல்களை Population growth alone will not drive credit benefits for emerging economies என்ற தலைப்பிலான அறிக்கையில் மூடிஸ் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகையால் நாட்டில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால், இதுமட்டுமே பொருளாதாரத்தை வலிமையாக்குவதுடன், நிதிப் பலன்களையும் பெருகச் செய்துவிடாது. வலிமையான பொருளாதாரத்துக்கு வலிமையான கல்விக் கட்டமைப்பு, தரமான உட்கட்டமைப்பு ஆகியனவும் அவசியம்.

கல்வித் தரத்தில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பணிபுரியும் வயதில் உள்ளோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிக்கும். இந்தச் சூழலில் இந்நாடுகள் கல்வித் தரம், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா, வங்கதேசத்தில் மேல்நிலைப்பளிப் படிப்பை முடித்த ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in