

காந்தி நகர்: ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம்,அதன் சேவையை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தி உள்ளது.
அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டங்களை அமெரிக்கடாலரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனத்தின் சர்வதேச துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி இண்டர் நேஷனல் லைஃப் மூலம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் கூறுகையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில், காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த திட்டங்கள் எங்களது சர்வதேச நிறுவனமான ஹெச்டிஎஃப்சி இண்டர் நேஷனல் லைஃப் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை மக்கள் அமெரிக்கடாலர் மூலம் வாங்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி ஏஎம்சி நிறுவனம் இந்தியாவில் சொத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொத்து மேலாண்மை சேவையை வழங்க,ஹெச்டிஎஃப்சி ஏ.எம்.சி இண்டர் நேஷனல் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம், குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரிலிருந்து (கிஃப்ட் சிட்டி) செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.