5 கதவுகளுடன் மஹிந்திரா தார் எஸ்யூவி: ஆக.15-ல் அறிமுகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று உலக அளவில் 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று மஹிந்திரா தங்கள் தயாரிப்பை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த 2020 முதல் இந்த வழக்கத்தை அந்நிறுவனம் கடைபிடித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி-யின் அறிமுகம் அமைந்துள்ளது. இந்த வாகனம் தென்னாப்பிரிக்க நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவிலும் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படும். தென்னாப்பிரிக்காவில் கடந்த 1996 முதல் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது மஹிந்திரா. அந்த நாட்டில் எக்ஸ்யூவி மற்றும் ஸ்கார்பியோ வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

அண்மையில் வெளிவந்த மாருதி சுசுகி நிறுவனத்தின் 5 கதவுகள் கொண்ட ஜிம்மி காரை காட்டிலும் 5 கதவுகள் கொண்ட தார் சற்றுப் பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த வாகனம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. இருந்தாலும் 3 கதவுகள் கொண்ட தார் வேரியண்ட்டை காட்டிலும் இதன் விலை அதிகம் இருக்கும் எனவும் தெரிகிறது. இந்த வாகனம் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டிருக்கும் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in